அஜித் - நயன்தாரா படங்கள் மோதல்


அஜித் - நயன்தாரா படங்கள் மோதல்
x
தினத்தந்தி 5 Aug 2019 11:15 PM GMT (Updated: 5 Aug 2019 9:06 PM GMT)

அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார்-வித்யாபாலன் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. வினோத் இயக்கி உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். பிங்க் இந்தி படத்தின் ரீமேக்காக தயாராகி உள்ளது. இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதில் ஏற்கனவே பல தடங்கல்கள் ஏற்பட்டன. கடந்த ஜனவரியிலேயே படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர்.

ஆனால் பேட்ட, விஸ்வாசம் படங்கள் அப்போது வெளியானதால் பிப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன்பிறகு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப்போனது. பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.

அப்போதும் படம் வரவில்லை. ஆகஸ்டு 1-ந் தேதி வெளியாகும், 2-ந் தேதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனாலும் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. 7-வது முறையாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தடைகளை தாண்டி வருகிற 9-ந் தேதி கொலையுதிர் காலம் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் மீண்டும் அறிவித்து உள்ளனர்.

Next Story