இணையதளத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படக்குழுவினர் அதிர்ச்சி


இணையதளத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 9 Aug 2019 11:00 PM GMT (Updated: 9 Aug 2019 6:48 PM GMT)

அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படம் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலை வலியாக உள்ளது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

ஆனாலும் பலன் இல்லை. ரஜினிகாந்தின் கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளியானது. இதுபோல் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன.

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே மற்றும் எல்.கே.ஜி. படங்களும் இணையதளத்தில் வெளியானது. தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களையும் தியேட்டருக்கு வந்த உடனேயே சுடச்சுட இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதையும் மீறி இணையதளத்தில் வந்துள்ளது. இதை பலரும் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். இதனால் வசூல் பாதிக்கும் என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர்.

Next Story