கொரோனாவால் பாதிப்பு: தெலுங்கு திரையுலகில் ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம்


கொரோனாவால் பாதிப்பு: தெலுங்கு திரையுலகில் ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம்
x
தினத்தந்தி 1 May 2020 4:54 AM GMT (Updated: 1 May 2020 4:54 AM GMT)

கொரோனாவால் பாதிப்பால் தெலுங்கு திரையுலகில் ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகமும் முடங்கி உள்ளன. நூற்றுக்கணக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். கொரோனாவால் தெலுங்கு திரையுலகில் ரூ.2 ஆயிரம் கோடி முடங்கி இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்குக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்து 15 படங்கள் திரைக்கு வர தயாராக இருந்தன. 70 படங்கள் தயாரிப்பில் இருந்தன. இந்த படங்கள் அனைத்தும் முடங்கி உள்ளன.

‘ஆர் ஆர் ஆர்’ படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வந்தது. மேலும் சில படங்கள் ரூ.100 கோடி பட்ஜெட்டிலும், பல படங்கள் ரூ.20 கோடி மற்றும் ரூ.30 கோடியிலும், இன்னும் சில படங்கள் ரூ.2 கோடி மற்றும் ரூ.3 கோடியிலும் தயாராகி வந்தன.

இந்த படங்களும், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ரவிதேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் ஊரடங்கில் சிக்கி உள்ளன.

இதனால் தெலுங்கு பட உலகில் ரூ.2 ஆயிரம் கோடி வரை முடங்கிப்போய் இருக்கிறது. இதனால் தெலுங்கு திரையுலகினருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story