நடிகர் செந்தில் பெயரில் உலா வரும் போலி டுவிட்டர்


நடிகர் செந்தில் பெயரில் உலா வரும் போலி டுவிட்டர்
x
தினத்தந்தி 6 May 2020 10:51 AM GMT (Updated: 6 May 2020 10:51 AM GMT)

நடிகர் செந்தில் பெயரில் உலா வரும் போலி டுவிட்டர்

சென்னை, 

நடிகர் செந்தில் முதலில் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள இந்த சூழலில் பலரும் சமூக வலைதளத்தின் தாக்கத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். இதனிடையே மே 5 அன்று மாலை நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

அதில் அவருடைய பெயரில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், 

நான் உங்கள் காமடி நடிகர் செந்தில், கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன் கூடிய விரைவில் இன்னும் படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன் எனவே நான் தற்போது டுவிட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன் அனைவரும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி என பதிவிடப்பட்டுள்ளது.

@senthiloffl என்ற பெயரில் அந்த ட்விட்டர் கணக்கு இருந்தது. இது தொடர்பாக நடிகர் செந்திலிடம்  ஒரு பத்திரிக்கை தரப்பில் இருந்து கேட்கபட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், தம்பி. எனக்கு போன் வந்தால் எடுத்துப் பேசத் தெரியும். இந்த டுவிட்டர் கிட்டர் எல்லாம் தெரியாது. அதெல்லாம் யாரோ ஆரம்பிச்சது. நமக்கு அதில் எல்லாம் கணக்கு இல்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story