விசாகப்பட்டினம் பாதுகாப்பாக இருக்கட்டும் - தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உருக்கம்


விசாகப்பட்டினம் பாதுகாப்பாக இருக்கட்டும் - தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உருக்கம்
x
தினத்தந்தி 8 May 2020 7:46 AM GMT (Updated: 8 May 2020 1:03 PM GMT)

விசாகப்பட்டினம் பாதுகாப்பாக இருக்கட்டும் என தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த சூழலில் நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன ஆலையிலிருந்து விஷ வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில்,இந்த சம்பவம் குறித்து தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தற்போதுள்ள இக்கட்டான சூழலில் விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து பற்றிய செய்தி இதய துடிப்பை நிறுத்துவது போல் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். 

பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டுகிறேன். உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். விசாகப்பட்டினம் பாதுகாப்பாக இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story