அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை


அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை
x
தினத்தந்தி 11 May 2020 7:15 AM GMT (Updated: 11 May 2020 7:15 AM GMT)

அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் 6 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அன்னவாசல் என்ற திட்டம் மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என தாமே உணவு சமைத்துச் சாப்பிட வழியின்றித் தவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தருகிற முயற்சியினை கடந்த மே 1-ம் தேதி `மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே1-ஆம் தேதி துவக்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது.

நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  'மாமதுரை அன்னவாசல்' திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story