குடிகாரர்கள் மீது காட்டம்: கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவா?


குடிகாரர்கள் மீது காட்டம்: கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவா?
x
தினத்தந்தி 21 May 2020 12:22 AM GMT (Updated: 21 May 2020 12:22 AM GMT)

கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவு செய்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா ஊரடங்கு தளர்வில் அரசு மதுக்கடைகளை திறந்ததும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மதுவாங்க கூட்டம் கூடியதால் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடைகள் மூடப்பட்டன. தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடிவரை வழங்கி ஊரடங்கில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுவாங்க முண்டியடிக்கும் கூட்டத்தினர் படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

மதுபான கடைகள் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மதுக்கடை முன்னால் திரண்ட கூட்டத்தினரை பார்த்து, எனது அம்மாவும், நண்பர்களும், “நாம் கஷ்டப்பட்டு மற்றவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இவர்கள் பொறுப்பற்ற முறையில் நடக்கிறார்களே, இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர். அம்மா, நண்பர்கள் மட்டுமன்றி எனக்கு உதவுகிறவர்கள் கூட நாம் சரியானவர்களுக்குத்தான் உதவுகிறோமா? நமது சேவையால் உண்மையான பலன் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பினர்.

சேவையை நிறுத்தினால் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே சேவையை நிறுத்த வேண்டாம் என்றேன். மது குடிப்பவர்களுக்கு எனது வேண்டுகோள். குடிப்பதற்கு முன் உங்கள் குழந்தையின் கண்ணீரை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.


Next Story