‘கோல்டன் குளோப்' விருதுக்கு சூர்யாவின் ‘ஜெய்பீம்’ தேர்வு


‘கோல்டன் குளோப் விருதுக்கு சூர்யாவின் ‘ஜெய்பீம்’ தேர்வு
x
தினத்தந்தி 1 Dec 2021 4:33 PM GMT (Updated: 1 Dec 2021 4:33 PM GMT)

‘கோல்டன் குளோப்’ விருது விழாவில் திரையிட ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு என்பவரை பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. 

இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஜெய்பீம் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த படத்துக்கு விருதுகள் வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. எதிர்ப்பு காரணமாக சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் திரைப்படம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ‘கோல்டன் குளோப்’ விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கோல்டன் குளோப் விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஜெய்பீம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது.

Next Story