“தமிழால் இணைவோம்” - அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு


“தமிழால் இணைவோம்” - அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 12 April 2022 8:30 PM GMT (Updated: 12 April 2022 8:32 PM GMT)

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் “தமிழால் இணைவோம்” என்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.

சென்னை, 

இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார்.

அந்த படத்தில், “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் “தமிழால் இணைவோம்” என்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர். இதன் காரணமாக “தமிழால் இணைவோம்” என்ற பதிவு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Next Story