கடின உழைப்பு, விடா முயற்சியுடன் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை


கடின உழைப்பு, விடா முயற்சியுடன் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 1:54 PM GMT)

கடின உழைப்பு, விடா முயற்சியுடன் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சம்பத் அறிவுரை வழங்கினார்.

சேலம்,

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

சேலம் மரவனேரியில் உள்ள புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதி யில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல வேலைவாய்ப்பு இயக்குனர் லதா, மாவட்ட வேலை வாய்ப்புத்துறை துணை இயக்குனர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வம், தொழில் மைய திட்ட மேலாளர் சிவகுமார், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2–வது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

முகாம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி திட்டஅறிக்கை தயாரித்தல் வங்கி கடன் பெற்று உரிய தொழில் தொடங்குதல் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வளர உதவுகிறது.

போட்டி தேர்வு

தொழில் மையத்தின் மூலம் ரூ.5 லட்சத்திற்மேல் ரூ.1 கோடி வரை கடன் பெற்று, அவற்றில் 25 சதவீதம் மானியமாகவும், 3 சதவீத வட்டி தள்ளுபடி மானியமாகவும் பெற்று தொழில் செய்ய உதவுகிறது. இளஞர்கள் இந்த அறிய வாய்பினை பயன்படுத்திக் கொண்டு வாழ்கையில் மேன்மை அடைய வேண்டும். மேலும் மாணவர்கள் கடின உழைப்பு, விடா முயற்சியுடன் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக உயர்கல்வி, வேலை வாய்ப், சுயவேலை வாய்ப்பு, முப்படை வேலை வாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.


Next Story