பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 9,224 மாணவ-மாணவிகள் எழுதினர்


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 9,224 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 9:22 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 9,224 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் 2016-17-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் நாள் தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 24 மையங்களில் தேர்வு நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7.30 மணியளவில் இருந்தே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மைய வளாகத்தில் மாணவ, மாணவிகள் அமர்ந்து கொண்டு, படித்த பாடங்களை கடைசியாக ஒரு முறை திருப்பி பார்த்து நினைவு கூர்ந்தனர்.

தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை வழங்கி வெற்றிகரமாக தேர்வு எழுதுமாறு முத்தமிட்டு வாழ்த்தினர். தேர்வு அறைகளில் மாணவ, மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது ஆசிரியர்கள் விளக்கி கூறினர். மேலும் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் ஆசிரியர்கள் பதில் கூறினர். எனினும் தமிழ் முதல் தாள் தேர்வு என்பதால் மாணவர்கள் பதற்றமடையாமல் புத்துணர்வுடனேயே காணப் பட்டனர்.

மாணவர்கள் ஆர்வம்

பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவிகள் புத்தக பைகளை வெளியே வைத்துவிட்டு தேர்வு எழுதும் அறைகளுக்கு சென்றனர். அப்போது தேர்வுக்கூட நுழைவு சீட்டு உள்ளிட்டவற்றை அறை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்தனர். சரியாக 10 மணியளவில் மாணவர்கள் முன்னிலையில் தமிழ் முதல் தாள் பாடத்திற்கான வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வழங்கப் பட்டன.

வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளை மாணவ, மாணவிகள் 10 நிமிடம் வாசித்தனர். இதற்கிடையே விடைத்தாள் வழங்கப்பட்டு வரிசை எண் சரிபார்க்கப்பட்டது. சரியாக 10.15 மணியளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் வினாக்களை படித்து ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

9,224 பேர் எழுதினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத 4,701 மாணவர்கள், 4,569 மாணவிகள் என மொத்தம் 9,270 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 9,224 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 46 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங் களுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் பஸ் வசதி, தேர்வு எழுதும் அறையில் குடிநீர் வசதி, தடையின்றி மின்சார வசதி உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு இருந்தன.

மேலும் தேர்வு மையங் களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அரசு தேர்வில் முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து மையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 57 தனித்தேர்வர் களில் 53 பேர் தேர்வு எழுதினர். 4 பேர் தேர்வுக்கு வரவில்லை.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு பணிக் காக முதன்மை கண்காணிப் பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப் பாளர்களாக 32 தலைமை ஆசிரியர்களும், துறை அலு வலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 32 ஆசிரியர் களும், அறை கண்காணிப் பாளர்களாக 546 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, ரோவர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், மாணவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்தும் கேட்டு அறிந்தனர்.

பறக்கும் படை

தேர்வின்போது துண்டு சீட்டு வைத்திருத்தல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை கண்டுபிடிப்பதற்காக 73 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு அறைகளில் சுற்றி சுற்றி வந்து மாணவர்களை கண்காணித்தனர்.

காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின்னர் மாணவர்கள் விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர்.

கூடுதல் நேரம்

அதன்பின்னர் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை சந்தித்து சந்தேக வினாக்களின் விடைகள் குறித்து கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டனர். பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய, கையால் எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விடைகளை சொல்ல சொல்ல ஆசிரியர்கள் தேர்வு எழுதி கொடுத்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக் கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது. 

Next Story