குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சேர்த்த பெண் சாவு உறவினர்கள் சாலை மறியல்


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சேர்த்த பெண் சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 1 April 2017 7:46 PM GMT)

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சேர்த்த பெண் இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூரை அடுத்த வெள்ளியணை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் நகுல்சாமி. நிதி நிறுவன ஊழியர். இவருடைய மனைவி லாவண்யா(வயது 27). இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2-வது பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக லாவண்யா கடந்த 29-ந் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் 30-ந் தேதி அறுவை சிகிச்சைக்காக லாவண்யாவை டாக்டர்கள் அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப் படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் நேற்று முன்தினம் இரவு அவரை மீண்டும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் லாவண்யா உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நேற்று கரூர் அரசு மருத்துவமனை முன்பு ஒன்றுகூடினர். பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாவண்யாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றுகூறி கரூர்- புகளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- புகளூர் சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story