குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம்


குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம்
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2 April 2017 8:50 PM GMT)

குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,


தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 1,236 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்து ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:–

போலியோவை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு 2 முறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போலியோ சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (அதாவது நேற்று) முதல் கட்டமாகவும், வருகிற 30–ந்தேதி 2–வது கட்டமாகவும் நடைபெறுகிறது.

1,236 மையங்கள்


குமரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்து 53 ஆயிரம் குழந்தைகளுக்கு முதல் கட்ட முகாமில் போலியோ சொட்டு மருந்து வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,236 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4,944 பணியாளர்கள்


மேலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 8 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

முகாமை நடத்தி முடிப்பதற்கான பணியில் 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள்) ஈடுபட்டுள்ளனர். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வு பணிகளுக்கு 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்தினை போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நிகழ்ச்சியில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவீந்திரன், துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) மதுசூதனன், சுந்தரவேல்விழி (புள்ளியியல்), டாக்டர் பிரவீன், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரே‌ஷகுமார், உலக சுகாதார நிறுவன ஆலோசகர் பிரதாப் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story