நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மரணம் சித்தராமையா, தேவேகவுடா உள்பட தலைவர்கள் அஞ்சலி


நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மரணம் சித்தராமையா, தேவேகவுடா உள்பட தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 1 Jun 2017 3:30 AM IST (Updated: 1 Jun 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சித்தராமையா, தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பார்வதம்மா ராஜ்குமார் கன்னட திரையுலகில் ம

பெங்களூரு,

உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சித்தராமையா, தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பார்வதம்மா ராஜ்குமார்

கன்னட திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் கடந்த 2006–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய மனைவி பார்வதம்மா ராஜ்குமார்(வயது 78). இவர் கன்னட திரைப்படங்களை தயாரித்து வந்தார். சுமார் 85 படங்களை தயாரித்து உள்ளார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து, செயற்கை சுவாச கருவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதில் அவருடைய உடல்நிலை ஓரளவுக்கு தேறியது. நாளுக்குள் நாள் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்தது. அவர் எப்படியும் முழுமையாக குணம் அடைந்துவிடுவார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதே கருத்தை தான் அவருடைய மகன்கள் கூறினர்.

மரணம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பார்வதம்மா ராஜ்குமாரின் உடல்நிலை சற்று மோசம் அடைந்தது. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு இவை அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிகாலை 4.40 மணிக்கு அந்த மருத்துவமனை வெளியிட்டது.

நடிகர் ராஜ்குமார்–பார்வதம்மா ராஜ்குமார் தம்பதிக்கு சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் சிவராஜ்குமார் மற்றும் புனித்ராஜ்குமார் ஆகிய இருவரும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். பூர்ணிமா, லட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

அறிமுகம் செய்து வைத்தார்

மொத்தம் 12 பேரன்–பேத்திகள் இருக்கிறார்கள். சிவராஜ்குமாரின் மனைவி கீதா, முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகள் ஆவார். பார்வதம்மா ராஜ்குமார் தயாரித்த ‘ஹாலு ஜேனு‘, ‘திரிமூர்த்தி‘, ‘கவிரத்னா காளிதாசா‘ ‘ஜீவன சைத்ர‘ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

தான் தயாரித்த படங்கள் மூலம் நடிகைகள் ரக்ஷிதா, மாலாஸ்ரீ, ரம்யா, சரிதா, ஜெயப்பிரதா, மாதவி, அம்பிகா, சுதாராணி உள்ளிட்ட கதாநாயகிகளை கன்னட திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மார்பக புற்றுநோய்

பார்வதம்மா ராஜ்குமாரின் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை தலைவர் டாக்டர் நரேஸ்ஷெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பார்வதம்மா ராஜ்குமாருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது. இந்த புற்றுநோய் அவருடைய உடலில் கல்லீரல், நுரையீரலுக்கும் பரவியது. சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அவருக்கு திடீரென ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைய தொடங்கியது. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்போது அவருடைய மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சித்தராமையா நேரில் அஞ்சலி

இதற்கிடையே பார்வதம்மா ராஜ்குமாரின் உடல் நேற்று காலை 6 மணிக்கு சதாசிவநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், ஆஞ்சனேயா, எம்.பி.பட்டீல், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்திய மந்திரி அனந்தகுமார், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, மேயர் பத்மாவதி உள்பட தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் அம்பரீஷ், துவராகநாத், நடிகைகள் சரோஜாதேவி, ஜெயந்தி, கர்நாடக சினிமா வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்து, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா எம்.எல்.ஏ. உள்பட கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து பார்வதம்மா ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

அதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் அவருடைய உடல் கண்ணாடியில் மூடப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ராஜ்குமாரின் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகளை இளைய மகன் புனித் ராஜ்குமார் செய்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ராஜ்குமாரை போல் பார்வதம்மா ராஜ்குமாரின் கண்களும் அவருடைய விருப்பப்படியே தானம் செய்யப்பட்டன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடகத்தில் கன்னட படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பார்வதம்மா உடல் வைக்கப்பட்டிருந்த சதாசிவநகர் வீடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட கன்டீரவா ஸ்டூடியோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


Next Story