வதைக்கும் வாளையார் சோதனைச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு வருமா?


வதைக்கும் வாளையார் சோதனைச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு வருமா?
x
தினத்தந்தி 8 Jun 2017 10:15 PM GMT (Updated: 8 Jun 2017 5:57 PM GMT)

வாட்டி வாதைக்கும் வாளையார் சோதனைச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை,

தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறு பகுதியில் கேரள அரசின் வணிக வரித்துறை, கலால் வரித்துறை, போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சோதனைச்சாவடிகளின் வழியாக நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. இந்த 3 சோதனைச்சாவடிகளிலும் வாகன தணிக்கையின்போது 12 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை லாரிகள் காத்து நிற்பதால் லாரி டிரைவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது:-

48 மணிநேரம் வரை காத்திருப்பு

தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறி, பால், சமையல் எண்ணெய், கட்டுமான பொருட்கள், சிமெண்டு, பம்புசெட், எந்திர தளவாடங்கள், உரம், கறிக்கோழி, முட்டை, மின்சாதன பொருட்கள் என்று ஏராளமான பொருட்கள் லாரிகள் மூலம் கேரளாவுக்கு நாள்தோறும் கொண்டு செல்லப்படுகிறது.

மேற்கண்ட பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் ஒருநாள் தடைபட்டாலும் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடும். இருப்பினும் கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் பலமணி நேரம் காக்க வைக்கிறார்கள். ஒருசில சமயங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக டிரைவர்கள் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது.

திறக்க வேண்டும்

இதனால் அவர்கள் சாலையோரங்களில் சமைத்து சாப்பிடும் அவல நிலை காணப்படுகிறது.

கேரளாவில் உள்ள மிகப்பெரிய சோதனைச்சாவடியாக வாளையார் சோதனைச்சாவடி திகழ்கிறது. இங்கு 12 பூத்துகள் உள்ளன. ஆனால் இங்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால் 6 பூத்துகள் மட்டுமே செயல்படுகிறது. இதுவும் காலதாமதத்துக்கு முக்கிய காரணம் ஆகும். எனவே கால தாமதத்தை தவிர்க்க பூட்டியே கிடக்கும் 6 பூத்துகளை திறக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால் கேரள அரசோ ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போதிய நிதி இல்லை என்று அற்ப காரணங்களை கூறி வருகிறது.

வருவாய் இழப்பு

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கேரள அரசு நுழைவு வரியாக 10 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம் வரை விதிக்கிறது. குறிப்பாக சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து இறைச்சி கோழிகளுக்கு மட்டும் நுழைவு வரியாக 14 சதவீதம் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றால் கேரள அரசுக்கு வரியாக ரூ.1,400 செலுத்த வேண்டும்.

ராஜஸ்தானில் இருந்து வரும் மார்பிள் கற்கள் மற்றும் கிரானைட் கற்களுக்கு 14 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் மணலுக்கு 14 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வரி அதிகமாக இருப்பதால் சோதனைச்சாவடி வழியாக செல்லாமல் சிலர் வேறு மார்க்கமாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்களை கடத்தி செல்கிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அவல நிலை

வாளையார் சோதனைச்சாவடிக்கு கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, பீகார், ஒடிசா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் கேரள அரசுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தியும் தணிக்கை என்ற பெயரில் சில அதிகாரிகள் பல மணி நேரம் காக்க வைக்கிறார்கள்.

இதேபோல் உரிய ஆவணங்கள் இருந்தும் மாமூல் வாங்குவதற்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் லாரி டிரைவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒருசில சமயங்களில் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் விபத்தில் சிக்கி பலியாக வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எனவே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரள அரசின் வருவாயை பெருக்க பூட்டியே கிடக்கும் பூத்துகளை உடனடியாக திறக்க வேண்டும். சோதனைச்சாவடியில் முறையாக வரி செலுத்துபவர்களுக்கு கெடுபிடி செய்து வாட்டி வதைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், லாரி டிரைவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வாட்டி வதைக்கும் வாளையார் சோதனைச் சாவடி பிரச்சினைக்கு எப்போது தீர்வு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story