காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்த முயன்ற பெண்


காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்த முயன்ற பெண்
x
தினத்தந்தி 8 Jun 2017 11:15 PM GMT (Updated: 8 Jun 2017 7:12 PM GMT)

காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்த முயன்ற சென்னை பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல்

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சந்தியா (வயது 24). திருப்பத்தூரை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்(28). சந்தியாவும், கேசவனும் சென்னையில் உள்ள ஒரு தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். அப்போது சந்தியாவும், கேசவனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மேலும் சந்தியாவை திருத்தணிக்கு அழைத்து சென்று, கேசவன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேசவன், சந்தியாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ வேறு சமூகத்தை சேர்ந்தவள், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவன் என கூறிவிட்டார். இதற்கிடையில் கேசவனின் பெற்றோர் அவருக்கு வேறு பெண்ணை பார்த்து, நேற்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஏற்பாடுகள் நடந்தது.

போலீசில் புகார்

இதற்கிடையில் கடந்த மாதம்(மே) 5-ந் தேதி திருத்தணி அனைத்து மகளிர் போலீசில் கேசவன் மீது சந்தியா புகார் தெரிவித்தார். அதில் கேசவன் ஆசைவார்த்தை கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்து விட்டு , இப்போது சாதி பெயரை கூறி திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
அந்த புகார் மனுவின் நகலை திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து, கேசவன் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.

திருமணம் நடந்தது

இந்த நிலையில் நேற்று கேசவனுக்கும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதை அறிந்து, சந்தியா அங்கு வந்தார். அங்கு கேசவனின் திருமணத்தை நிறுத்த சந்தியா முயற்சி மேற்கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் கேசவன், கோர்ட்டில் வழக்கு உள்ளது, நான் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கிவிட்டேன் என கூறி, அதற்குரிய ஆவணங்களை காண்பித்தார்.

அதன்பிறகு போலீசார் சந்தியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு கேசவனுக்கும், அவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறிக்கொண்டு, திருமணத்தை நிறுத்த இளம்பெண் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story