கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொல்ல முயற்சி சமையல் மாஸ்டர் கைது


கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொல்ல முயற்சி சமையல் மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 8 Jun 2017 7:39 PM GMT)

போச்சம்பள்ளி அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொல்ல முயன்ற சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). சமையல் மாஸ்டர். இவரது மனைவி தெய்வானை (38). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மனைவி தெய்வானையுடன் அடிக்கடி முருகன் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தெய்வானைக்கு போன் வந்தது. அவர் போனில் பேசிக்கொண்டிருந்தபோது முருகன் அங்கு வந்தார். யாருடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறாய்? என தெய்வானையிடம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரும் தூங்க சென்றனர்.

கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார்

அப்போது மனைவி மீது ஆத்திரம் அடைந்த முருகன் தூங்கி கொண்டிருந்த தெய்வானையின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்து தெய்வானை அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து தெய்வானையை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story