காதல் தோல்வியால் வேதனை: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தற்கொலை


காதல் தோல்வியால் வேதனை: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2017 10:30 PM GMT (Updated: 8 Jun 2017 10:30 PM GMT)

காதல் தோல்வியால் வேதனையடைந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

சேலம் அருகே உள்ள அரியானூர் அண்ணாமலையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. விவசாயி. இவரது மகன் குலசேகரன்(வயது 31). இவர், ஏற்காடு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ந் தேதி விஷம் குடித்த நிலையில் குலசேகரன் வீட்டில் மயங்கி கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.

காதல் தோல்வி

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குலசேகரன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதாவது, குலசேகரன் கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது தங்கைக்கு திருமணம் முடிந்த பின்னர், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்துள்ளார்.

ஆனால், அதற்குள் காதலிக்கு வேறுநபருடன் திருமணம் முடிந்து விட்டது. இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். காதல் தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு திருமணத்தில் அவருக்கும் நாட்டம் இல்லாமல்போய் விட்டது. பெற்றோர் பலமுறை கூறியும் மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குலசேகரனின் தங்கைக்கு திருமணம் முடிந்து துபாய் சென்று விட்டார். சில மாதங்கள் கழித்து மகளுக்கு உதவியாக தாயாரும் துபாய் சென்று விட்டாராம். ஊருக்கு திரும்பியதும் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு தாயார் சென்றதாக தெரிகிறது. திருமணத்தை விரும்பாத குலசேகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Story