விழுப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி


விழுப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 8 Jun 2017 10:52 PM GMT (Updated: 8 Jun 2017 10:52 PM GMT)

விழுப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

விழுப்புரம்,

இந்தநிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்காக ரெயிலடி விநாயகர் கோவில் பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேம்பாலம் சீரமைப்பு பணி

விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்ல விழுப்புரம் மாதா கோவில் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அந்த பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இருப்பினும் அத்தியாவசிய தேவைக் காகவும், வேலை செல்லவும் கீழ்பெரும்பாக்கம் ரெயில் வே சுரங்கப்பாதை வழியாக விழுப்புரம் நகரப்பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வேறு எந்த பாதையிலும் போக்குவரத்தை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை.

மாற்றுப்பாதை

இதனால் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாகவே விழுப்புரம் நகருக்கு வந்து மீண்டும் அதே வழியிலேயே செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் எந்தவித சிரமமும் இன்றி எளிதில் செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளது.

கூடுதல் போலீசார்

அதாவது காலை 8 மணி முதல் 10 மணி வரையும், அதேபோல் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் விழுப்புரம் ரெயிலடி விநாயகர் கோவில் பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அந்த பாதை வழியாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்துச்செல்லும் பெற்றோர்களும் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்றனர். அவர்களை பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அந்த பாதையில் கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Next Story