சிந்தலவாடி மணல் குவாரியை மூடக்கோரி லாலாப்பேட்டையில் கடையடைப்பு- பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


சிந்தலவாடி மணல் குவாரியை மூடக்கோரி லாலாப்பேட்டையில் கடையடைப்பு- பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2017 10:15 PM GMT (Updated: 9 Jun 2017 7:51 PM GMT)

சிந்தலவாடி மணல் குவாரியை மூடக்கோரி லாலாப்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாலாப்பேட்டை,

கரூர் மாவட்டத்தில் மாயனூர், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு மணல் அள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மாயனூர், சிந்தலவாடி பகுதிகளில் பொதுமக்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் சிந்தலவாடி, கள்ளப்பள்ளி பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மேலும் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் சிந்தலவாடியில் மணல் குவாரி அமைந்துள்ள பகுதிகளில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு சிந்தலவாடி மணல் குவாரியை மூடக்கோரி கடையடைப்பு மற்றும் குவாரி முற்றுகை போராட்டத்திற்கு பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று லாலாப்பேட்டை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் மணல் குவாரிக்கு எதிராக திரண்ட பொதுமக்களுடன், ஆற்று பாதுகாப்பு இயக்கத்தினரும் இணைந்து கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் ஊர்வலமாக வந்த பொதுமக்களை, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதையடுத்து ஒரு கோவிலில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கரூர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை சூப்பிரண்டுகள் கரூர் கும்மராஜா, குளித்தலை முத்துகருப்பன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வீரமுத்து ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிந்தலவாடி மணல் குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் உயர் அதிகாரிகளிடம் பேசி, குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் 20 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு குளித்தலை சென்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அவர்களுடன், கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ், குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அரசு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டது.

Next Story