மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தை தாக்கியது கண்டனத்துக்குரியது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தை தாக்கியது கண்டனத்துக்குரியது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2017 9:56 PM GMT (Updated: 9 Jun 2017 9:56 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை தாக்கியது கண்டனத்துக்குரியது என்று அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் மாற்றுவதாக அறிவித்தது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்பும், இங்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.

மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு சாதனையை கொண்டாடி வருகிறது. ஆனால் அவர்கள் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியே அடைந்து உள்ளது. மத்திய அரசின் தோல்விகளை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம். எனவே, எங்கள் தலைவர்கள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இது கண்டனத்துக்குரியது.

புயல் நிவாரண நிதி

பதவிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது. ஆனால் பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன பின்பும் 1 லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வின் பிளவை பயன்படுத்தி, அவர்களை மிரட்டி தமிழகத்தில் பா.ஜனதாவை நிலை நிறுத்த பார்க்கிறார்கள்.

மேலும் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை.

தி.மு.க.வுடன் நட்பு

தமிழகத்தில் வறட்சி நிவாரண பணிகள், வகுப்பு வாதம் தலைதூக்குவதை தடுக்கும் நோக்கில் நாங்கள் தி.மு.க.வுடன் இணைந்து நட்புடன் செயல்பட்டு வருகிறோம். இதை கூட்டணிக்கான அச்சாரமாக கருதக்கூடாது.
ரஜினிகாந்த் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, அரசியலுக்கு வரும் முன்பு அவரது கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும். அதன்பின்பே இது பற்றி கருத்து தெரிவிப்போம். கேரளாவில் மீண்டும் மதுபார்கள் திறக்க அங்குள்ள அரசு உத்தரவிட்டிருப்பது அந்த மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையிட்டார்

திருவனந்தபுரத்தில் பா.ஜன தா அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டம் மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் செம்மாங்காலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியும் மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. இதனை ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர் முகம்மது, லீமா ரோஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Next Story