ஆட்டோ– கார் நேருக்கு நேர் மோதல்: பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலி


ஆட்டோ– கார் நேருக்கு நேர் மோதல்: பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2017 10:00 PM GMT (Updated: 16 Jun 2017 6:54 PM GMT)

ஆட்டோ– கார் நேருக்கு நேர் மோதல்: பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலி 6 பேர் படுகாயம்

பட்டிவீரன்பட்டி,

வத்தலக்குண்டு அருகே ஆட்டோ– கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் வக்கீல் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வக்கீல்கள்

நிலக்கோட்டையை சேர்ந்தவர்கள் மேகநாதன் (வயது 58), சாருமதி (45). திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் இருவரும் வக்கீலாக இருந்தனர். நேற்று இருவரும் வேலை தொடர்பாக செம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை வத்தக்குண்டு அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.

அதேபோல் தேனியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பழனி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை ஜெகநாதன் (45) என்பவர் ஓட்டினார். வத்தலக்குண்டு அருகே உள்ள சுந்தரராஜபுரம் பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

6 பேர் படுகாயம்

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரும் பலத்த சேதம் அடைந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சாருமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மேகநாதன், ஆட்டோ டிரைவர் செல்வம் மற்றும் காரில் வந்த கனகராஜ், அவருடைய மனைவி பிரீத்தி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சாருமதியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனைக்கு போகும் வழியில் மேகநாதன் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story