இலவசம் என மோசடி: பெண்களிடம் ரூ.3 கோடி சுருட்டிய நகைக்கடை அதிபர் கைது


இலவசம் என மோசடி: பெண்களிடம் ரூ.3 கோடி சுருட்டிய நகைக்கடை அதிபர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 10:45 PM GMT (Updated: 16 Jun 2017 7:09 PM GMT)

சென்னையில் ஒரு பவுன் தங்கம் வாங்கினால் ஒரு பவுன் இலவசம் என்று நூதன முறையில் பெண்களிடம் பணம் வசூலித்து ரூ.3 கோடி வரை சுருட்டிய நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

வடபழனியில் ‘மனம் ஜூவல்லரி’ என்ற பெயரில் செயல்பட்ட நகைக்கடை சார்பிலும், அரும்பாக்கத்தில் செயல்பட்ட ‘மனம் மார்க்கெட்டிங்’ என்ற நிறுவனத்தின் சார்பிலும் ஒரு பவுன் வாங்கினால் ஒரு பவுன் இலவசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

5 பவுன் இலவசம்

மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை கவரும் வகையில் ஏராளமான பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கட்டி உறுப்பினராக சேர்ந்தால் 5 பவுன் நகை இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்துவிடும் பெண்களுக்கும் தனியாக கமிஷன் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தன.

ஆனால் இதில் பணம் கட்டிய பெண்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டது.

போலீசில் புகார்

கிருஸ்துதாஸ் (வயது 57) என்பவர் தான் இந்த நகை மோசடி திட்டத்தை நடத்திவந்ததாக புகார் கூறப்பட்டது. ‘மனம் ஜூவல்லரி’ நகைக் கடையும், ‘மனம் மார்க்கெட்டிங்’ நிறுவனமும் இவரால் நடத்தப்பட்டன.

கோடிக்கணக்கான பணத்தை பெண்களிடம் வசூலித்து சுருட்டிய கிருஸ்துதாஸ் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். மதுரவாயலைச் சேர்ந்த பானுமதி (47) என்பவர் 60 பெண்களை இந்த மோசடி திட்டத்தில் சேர்த்துவிட்டு ரூ.16.25 லட்சம் வரை வசூலித்து கொடுத்துள்ளார்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பானுமதி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கிருஸ்துதாஸ் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று மதுரவாயல் போலீசார் கூறினார்கள். இதனால் பாதிப்படைந்த பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கைது

இதன்பேரில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கிருஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மதன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

கிருஸ்துதாசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் ரூ.3 கோடி வரை பெண்களை ஏமாற்றி அபகரித்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story