வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஊட்டி அருகே உள்ள எம்.பாலாடா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளதாவது:–
எம்.பாலாடா கே.கே. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுரேசை, பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர் ஒரு பிரச்சினை தொடர்பாக தாக்கி உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சுரேஷ் கடந்த 14–ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே, சுரேசை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவரது உடலை நாங்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெற்று அடக்கம் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுத்தினர். உடனே போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் சுரேசை தாக்கிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.