தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட வேண்டும்

தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார்.
விழுப்புரம்,
கம்பன் கழகம் சார்பில் விழுப்புரத்தில் கம்பன் விழா கடந்த 4–ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கம்பன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் குழப்பமாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா என்னும் மிகப்பெரும் ஆளுமை விட்டு சென்ற இடத்தை அக்கட்சியினரால் நிரப்ப முடியவில்லை.
தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்களும் விரும்பவில்லை. பா.ஜ.க.வும் விரும்பவில்லை. எனவே தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட்டு மீதமுள்ள 4 ஆண்டுகளாக ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும். இது தான் அவர்கள் மறைந்த முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான மரியாதை ஆகும்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் மத்திய சுகாதாகரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் நான் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளோம்.
தமிழகத்துக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது நீட் என மத்திய அரசு நினைக்கிறது. தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளித்தால், சரியாக இருக்குமா, அதற்கு வேறு என்ன செய்யலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.