கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கரும்பு விவசாயிகள் பேரணி


கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கரும்பு விவசாயிகள் பேரணி
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 7 Aug 2017 9:04 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கரும்பு விவசாயிகள் பேரணி நடத்தினர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த பேரணிக்கு சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காசிநாதன், மாநில துணை தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கரும்பு விவசாயிகள் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு இணை அமைப்பாளர் கிருஷ்ணன், மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் சின்னப்பா ஆகியோர் பேசினர்.

பேரணியில், தனியார் சர்க்கரை ஆலைகள் மீது மாநில அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து 4 ஆண்டுகால கரும்பு பாக்கி ரூ.1,600 கோடியை பெற்றுத்தரவேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் ஆலைகள் லாபபங்கு தொகையை கடந்த 2004-2009 காலத்திற்கான ரூ.300 கோடியை தாமதமின்றி உடனே வழங்கவேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தரவேண்டிய கரும்பு நிலுவைத்தொகை ரூ.255 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளின் கடன் சுமை ரூ.2500 கோடியை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். கரும்பு மேம்பாட்டு நிதியில் இருந்து மத்திய அரசு வட்டியில்லா கடனாக நீண்ட கால தவணையில் ரூ.4 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் கோரிக்கைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சுந்தரமூர்த்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட தலைவர் கண்ணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராசைய்யன், செயலாளர் பொன்னுசாமி, வீரடிப்பட்டி பன்னீர்செல்வம் மற்றும் சங்கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story