பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதியதில் தாய்-மகள் பலி


பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதியதில் தாய்-மகள் பலி
x
தினத்தந்தி 7 Aug 2017 10:15 PM GMT (Updated: 7 Aug 2017 9:06 PM GMT)

பெரம்பலூர் அருகே உறவினரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த தாய்-மகள் மீது அரசு பஸ் மோதியதில், அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பொன்பரப்பியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி வள்ளியம்மை(வயது 65). இவருடைய தங்கை பார்வதி உடல்நலக்குறைவு காரணமாக பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவு வள்ளியம்மை, தனது மகள் செந்துறை தாலுகா மேலராயம்புரத்தை சேர்ந்த கஸ்தூரியை(35) அழைத்து கொண்டு பார்வதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பெரம்பலூருக்கு வந்தார். தனியார் மருத்துவமனையில் பார்வதியை பார்த்து அவர்கள் நலம் விசாரித்தனர்.

பஸ் மோதி பலி

பின்னர் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு கடையில் வள்ளியம்மையும், கஸ்தூரியும் டீ குடித்தனர். இதையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு செல்வதற்காக அவர்கள் 2 பேரும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வள்ளியம்மை, கஸ்தூரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் திருச்சி சிறுகனூரை சேர்ந்த சேகரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதியதில் தாய், மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story