புழல் ஜெயிலில் கைதிகளிடம் 9 செல்போன்கள் பறிமுதல்


புழல் ஜெயிலில் கைதிகளிடம் 9 செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 8:04 PM GMT)

புழல் ஜெயிலில் சிறப்புக்குழு நடத்திய அதிரடி சோதனையில் ஜெயிலுக்குள் செல்போன் பயன்படுத்திய 9 கைதிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம்,

தமிழக சிறைத்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன், கஞ்சா ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் இவற்றை தடுக்க அந்தந்த ஜெயிலர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு குழு அமைத்துள்ளார். அதிகமான செல்போன்களை பறிமுதல் செய்யும் குழுக்களுக்கு ரொக்க பரிசும் அளித்துள்ளார்.

சென்னை புழல் ஜெயிலில் நேற்று முன்தினம் இரவு ஜெயிலர் ஜெயராமன் தலைமையிலான சிறப்பு ஆய்வு குழுவினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.
அப்போது ஜெயிலில் செல்போன் வைத்திருப்பதாக சந்தேகம் படும்படியான 150-க்கும் மேற்பட்ட கைதிகளிடம் சோதனை செய்தனர்.

அப்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மறைமலைநகரை சேர்ந்த லிங்கேசன் (வயது 33), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திருப்பதி (34), புளியந்தோப்பை சேர்ந்த கோவிந்தசாமி(27), சென்னை அயனாவரத்தைச்சேர்ந்த ரமேஷ்(22), செங்கல்பட்டைச் சேர்ந்த பிரபு(26), பீர்க்கன்காரணையைச் சேர்ந்த பார்த்தீபன்(28), திருத்தணியைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(24) மற்றும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் (45) பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ்(26) உள்ளிட்ட 9 கைதிகளிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் பூந்தமல்லியைச்சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் செல்போனுடன் ¼ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜெயிலர் ஜெயராமன் புழல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்கு பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? செல்போன் மூலம் அவர்கள் யாரிடம் பேசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story