சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 8:08 PM GMT)

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை ஓட்டேரி மங்களபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 53). புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த உமாராணி (44), கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது, அசோக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு தனியாக குடும்பமும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு ஓட்டேரியில் உள்ள தன் வீட்டுக்கு அசோக்குமார் சென்றார். அப்போது உமாராணி அவரை அவசரமாக வருமாறு அழைத்து உள்ளார்.

உடனே தன் மனைவியிடம் போலீஸ் நிலையத்தில் அவசர வேலை இருப்பதாக கூறிவிட்டு அசோக்குமார் புறப்பட்டு சென்றார். திடீரென நள்ளிரவில் உமாராணி வீட்டில் இருந்து ஷாலினிக்கு செல்போன் அழைப்பு வந்தது. அப்போது, அசோக்குமார் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாகவும், அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் உமாராணி கூறினார்.

இதை கேட்டு பதறி அடித்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஷாலினி சென்றார். இது குறித்து புளியந்தோப்பு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று காலை அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story