தென்கர்நாடகத்தில் செயற்கை மழை திட்டம் முதல்கட்ட பணிகள் 13-ந்தேதி தொடக்கம்


தென்கர்நாடகத்தில் செயற்கை மழை திட்டம் முதல்கட்ட பணிகள் 13-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2017 12:15 AM GMT (Updated: 8 Aug 2017 11:18 PM GMT)

பருவமழை போதிய அளவு பெய்யாததால் தென்கர்நாடகத்தில் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
போதிய மழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நிலவி வருகிறது. இந்த கடும் வறட்சியால் கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் தற்காலிகமாக கோசாலைகள் அமைக்கப்பட்டு தீவனம், தண்ணீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வறட்சியால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கர்நாடக அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் செயற்கை மழையை பெய்விக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கியது. பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாவிட்டால் இந்த திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஜூன் மாதத்தில் மழை பற்றாக்குறையாக பெய்தது.

ஜூலை மாதம் நல்ல மழை பெய்யும் என்று கர்நாடக அரசு எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் ஓரளவுக்கு மட்டுமே மழை பெய்தது. இதனால் தென் கர்நாடகத்தில் காவிரியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகமாக வரத்தொடங்கியது. இருந்தாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

மொத்தத்தில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் செயற்கை மழையை பெய்விக்கும் திட்டத்தை தொடங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு கர்நாடக மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த செயற்கை மழையை பெய்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அத்துறையின் மந்திரி எச்.கே.பட்டீல் அறிவித்தார். அதன்படி செயற்கை மழையை பெய்விக்கும் பணிகளை வருகிற 13-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 விமானங்கள் மூலம் மேகங்களை செயற்கையாக ஒருங்கிணைக்கும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் வருகிற 13-ந் தேதி பெங்களூருவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக விமானங்களில் வேதிப்பொருட்கள் கலவை கொண்டு செல்ல ஏதுவாக டப்ளர் ராடார் கருவியை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வானில் மேக கூட்டங்கள் இருக்கும் பகுதியில் விமானம் மூலம் வேதிப்பொருள் கலவை கொண்டு செல்லப்பட்டு தெளிக்கப்படும். பின்னர் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழை பெய்விக்கப்படும். இதுவே செயற்கை மழை பெய்விக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 10 சதவீத மழையை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் முதலில் தென் கர்நாடகம் பகுதியில் தொடங்கப்படுகின்றன. அதன்படி மைசூரு, மண்டியா, ராமநகர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து வட கர்நாடகத்தில் இந்த பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்தில் 300 மணி நேரம் இந்த செயற்கை மழையை பெய்விக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.35.77 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
விமானம் மூலம் மேகங்களை ஒருங்கிணைக்க ரசாயன வேதிப்பொருட்கள் கலவையை தூவிய பிறகு 10 நிமிடங்களில் மழை பெய்ய வேண்டும். மழை பெய்யாவிட்டால் திட்டம் தோல்வி அடைந்ததாக கருதப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story