குறையும் ஜனத்தொகையால் கவலைப்படும் நாடு!


குறையும் ஜனத்தொகையால் கவலைப்படும் நாடு!
x
தினத்தந்தி 12 Aug 2017 8:20 AM GMT (Updated: 12 Aug 2017 8:20 AM GMT)

இளைஞர்கள் பலர் வேலையின்றி இருப்பதுதான் குழந்தைகளின் பிறப்பு விகித வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வித பிரச்சினை. அதிகரிக்கும் மக்கள்தொகை குறித்து நாம் கவலைப்படுகிறோம் என்றால், பிறப்பு விகிதம் குறைந்துவருவது குறித்து கவலைகொள்கிறது, தென்கொரிய அரசு.

மக்கள்தொகையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரும் இந்த ஆண்டு தென்கொரிய மக்கள்தொகை வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் வருத்தத்தோடு கூறுகின்றனர்.

திருமணமான தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை தென் கொரியா செலவிட்டுள்ளது.

ஆனால் அந்நாட்டில் இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள்தான் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பது பொருளாதாரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கவலைப்படுகிறார்கள்.

இளைஞர்கள் பலர் வேலையின்றி இருப்பதுதான் குழந்தைகளின் பிறப்பு விகித வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், வீடு மற்றும் உயரும் கல்விச் செலவுகள் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பால், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தாங்கள் விரும்பவில்லை என்று தம்பதிகள் கூறுகின்றனர்.

போதிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்படாததும், வீட்டு வேலைகளில் உதவுவதற்கு ஆண்கள் ஆர்வம் காட்டாததும் பெண்களுக்கு கூடுதல் பிரச்சினைகளாக இருக்கின்றன.

2016-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, தென்கொரிய நாட்டின் இறப்பு விகிதம் 1000 பேருக்கு 5.8 பேர்.

அந்நாட்டில் ஓராண்டுக்கு 4 லட்சத்துக்கும் கீழாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சென்றிருப்பது இதுவே முதல்முறை.

குழந்தை பிறப்புக்கு ஊக்கத்தொகை, மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு, மகப்பேறு சிகிச்சை செலவுக்கு உதவி என்று குழந்தைப் பிறப்பை அதிகரிக்க கடந்த பல ஆண்டுகளில் தென்கொரிய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி டாலர்களை செலவு செய்திருக்கிறது.

ஆனாலும் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இதனால் வருங்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும், முதியோருக்கான நலவாழ்வுச் செலவு அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் அஞ்சப்படுகிறது. 

Next Story