தேச நலனுக்காக இணைந்த வடதுருவம்.. தென்துருவம்..


தேச நலனுக்காக இணைந்த வடதுருவம்.. தென்துருவம்..
x
தினத்தந்தி 15 Aug 2017 5:45 AM GMT (Updated: 15 Aug 2017 5:49 AM GMT)

விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்ற மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி காமராஜர் போராட்ட களத்தில் குதித்தார்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்த இரண்டு தலைவர்களின் போராட்ட வாழ்க்கை குறித்து பார்ப்போம்.

* மகாத்மாவின் சொல்லும், செயலும் காமராஜருக்கு உற்சாகத்தை ஊட்ட ஆரம்பித்தன. 1922-ம் ஆண்டில் காந்தியடிகளின் அழைப்பை ஏற்று பொதுக் கூட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்களை வரவழைத்து சுதந்திரம் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தினார். காந்தியடிகளையே தம் வாழ்வின் உன்னத தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.

* காமராஜர் - காந்தியடிகள் நட்பு 1922-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 25 வருடம் நீடித்து சென்றது.

* காந்தியடிகளின் ஆடை விஷயத்தை பின்பற்றிய காமராஜர், பின் நாளில் பல்வேறு வெளிநாட்டு பயணங்களின் போதும் கூட ஆடை அணிதலில் மாற்றம் செய்து கொள்ளாமலே இருந்தார்.

* பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் காமராஜர் மலர் மாலை, பொன்னாடைகளை தவிர்த்தார். கதர் நூல் மாலைகளை பெரிதும் விரும்பி ஏற்பார். பின்னர் அவற்றை சமர்பதி ஆஸ்ரமத்திற்கு கொடுத்து அனுப்பி விடுவார்.

* 18.2.1929 அன்று சைமன் கமிஷன் சென்னை வந்தது. 1.3.1929 அன்று பல்லாயிரக் கணக்கான பொது மக்களை ஒன்று திரட்டி “சைமனே திருப்பி போ” என்று கோஷமிட்டு மதுரையில் மிகப்பெரிய போராட்டத்தை காமராஜர் நடத்தி காட்டினார்.

* காந்தியடிகள் தண்டியாத்திரை நடத்தியபோது வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியா கிரக போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜரை 9.6.1930 அன்று கைது செய்து முதல் முதலாக திருச்சி சிறையில் அடைத்தது ஆங்கில அரசு. பின்னர் 12.3.1931அன்று காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்.

* 1932-ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்திய போதும் பாரத தேவியின் மூவர்ண கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்துக் கொண்டு அடியினை தோள்களிலும் தலையிலும் வாங்கி உயிர் நீத்த திருப்பூர் குமரனின் இறுதிச் சடங்கில் முன்னிலை வகுத்தார் காமராஜர்.

* காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அதிகமான தொண்டர்களை திரட்டி காந்தியடிகளின் வருகைக்கு வரவேற்பு அளித்த பெருமைக்குரியவர்.

* 22.9.1921 அன்று மதுரை நகரில் ஒத்துழையாமை இயக்கத்தின் விழிப்புணர்ச்சி மற்றும் சுதந்திர வேட்கையின் அவசியத்தை மக்களிடத்தில் உருவாக்க மதுரையில் பேசினார் மகாத்மா காந்தியடிகள்.

* 1946-ம் ஆண்டில் காந்தியடிகள் தென் மாவட்டங்களில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தபோது காந்தியடிகளுடன் காமராஜர் பயணம் செய்தார்.

* மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட மதுரையில் அருங்காட்சியகம் ஒன்றை 1957-ம் ஆண்டு காமராஜர் அமைத்தார். அது இன்றுவரை செல்வனே பராமரிக்கப்பட்டு வருகின்றது.

* கதர் ஆடைகளை அணிவதிலே இரு தலைவர்களும் மிக கண்டிப்பாக இருந்தனர். இது நம் பாரம்பரியத்தின் மைல்கல்லாகும்.

* ராட்டையில் நூல் நூற்பதை வழிபாடாக கொண்டிருந்த காந்தியடிகள் தினமும் ராட்டையில் நூல் நூற்பதை கடமையாகக் கொண்டு இறுதிவரை கடைப் பிடித்து வந்தார்.

* ஏழை விவசாயி உடுக்க உடையில்லாத போது தான் அணிந்திருந்த ஆடம்பர உடை அவசியம் இல்லை என முடிவு செய்தார் காந்தியடிகள்.

* காமராஜர் தன்னுடைய சிந்தனை, செயல்பாடு, எண்ணங்கள், பேச்சு முதலானவற்றை இந்திய சுதந்திரம் என்கிற மூச்சுக்காற்றை நிரந்தரமாக நிம்மதியாய் சுவாசிக்க வேண்டும் என்ற காந்தியடிகள் பாதையில் பயணப்பட்டதால் குடும்பம், பந்தம், சொந்தம் எல்லாம் மறந்தார்.

* 22.9.1921 முதல் இறுதி நாள்வரை முழங்கால் வரை மட்டுமே உடையை அணிந்திருந்தார் காந்தியடிகள்.

Next Story