மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை எதிரொலி: அமராவதி அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை எதிரொலி: அமராவதி அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 7:26 PM GMT)

மேற்குதொடர்ச்சி மலையில் பலத்தமழை பெய்து வருவதன் எதிரொலியால் அமராவதி அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது. கடந்த 8 நாட்களில் நீர்மட்டம் மொத்தம் 13 அடி உயர்ந்துள்ளது.

தளி,

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலையை அடுத்த அமராவதி அணையை நீர் ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரளா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அமராவதி அணைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அதன்படி கடந்த மாதம் 28-ந்தேதி 53.91 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் ஏற்பட்ட நீர்வரத்தால் 13 அடி உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.10 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 842 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அமராவதி அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்ற விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனக்குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்துள்ளது. இதனால் வனவிலங்குகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமவெளி பகுதிக்கு வருவது பெருமளவு குறைந்துள்ளது.

உடுமலையை அடுத்த பஞ்சலிங்க அருவிக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில காலமாக பருவமழை பொய்த்து போனதால் மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி நிலவி வந்தது. இதனால் அங்குள்ள சிற்றாறுகளில் வறட்சி ஏற்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக முற்றிலுமாக நின்று விட்டது. இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் குழிப்பட்டி, குறுமலை, மேல்குருமலை, மாவடப்பு உள்ளிட்ட பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2-ந் தேதி இரவு பலத்தமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பங்சலிங்க அருவியில் கடந்த 3 மாதத்திற்கு பின்னர் காட்டாற்று வெள்ளம் கொட்டியது.

அதனை தொடர்ந்து பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதித்தது.

இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் கோவில் அருகே அமைந்துள்ள திருமூர்த்திமலை ஆற்றில் குளித்து சென்றனர். இந்த நிலையில் பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தின் சீற்றம் நேற்றுமுன்தினம் முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை கோவில் நிர்வாகம் நீக்கியது. இதைத்தொடர்ந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை சூழலை ரசித்ததுடன், பஞ்சலிங்க அருவியிலும் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story