7 தாலுகாக்களில் பொதுவினியோகத்திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது


7 தாலுகாக்களில் பொதுவினியோகத்திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 6 Sep 2017 10:15 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் பொதுவினியோகத்திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினரால் நடத்தப்படும் பொதுவினியோகத்திட்ட ரேஷன்கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிபடுத்தவும், பிற குறைகளுக்கு தீர்வு காணவும், தாலுகா அளவிலான குறைதீர்க்கும் முகாம் நாளைமறுநாள் (சனிக் கிழமை) மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் நடக்கிறது. இதன்படி தர்மபுரி தாலுகா அதகப்பாடி, பென்னாகரம் தாலுகா நெருப்பூர், பாலக்கோடு தாலுகா பி.செட்டியள்ளி, அரூர் தாலுகா மோபிரிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கோம்பூர், நல்லம்பள்ளி தாலுகா புறவடை, காரிமங்கலம் தாலுகா அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாம் நாளைமறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். முகாமில் வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் கலந்து கொள்வார்கள்.

தீர்வு பெறலாம்

முகாமில் நுகர்வோர்கள் தங்கள் குறைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மனுவில் குறிப்பிடப்படும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வார். இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பொதுவினியோகத்திட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக மேலும் விவரங்களை பெற தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1077, 8903891077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story