ரூ.276 கோடியில் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டஅறிக்கை தயார் அமைச்சர் பேட்டி


ரூ.276 கோடியில் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டஅறிக்கை தயார் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

கிருஷ்ணகிரி அணையில் இருந்து ரூ.276 கோடி மதிப்பீட்டில் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 7-ந்தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா வருகிற 10-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது. இந்த நிலையில் விழா நடைபெற உள்ள மைதானத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலெக்டர் விவேகானந்தன், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தர்மபுரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

நீர்பாசன திட்டங்கள்

தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு வரும் வகையில் நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் கால்வாயை நீட்டிக்கும் திட்டம் மூலம் அம்மன் ஏரியில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கட்டுக்கு தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டது. தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.276 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்பாசன திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், அதி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story