மாணவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக போலீசார் தேடிய பெண் தீக்குளிக்க முயற்சி


மாணவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக போலீசார் தேடிய பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Sep 2017 11:00 PM GMT (Updated: 11 Sep 2017 8:42 PM GMT)

உறவினர் மகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக போலீசாரால் தேடப்பட்ட பெண் தனக்கு இதில் தொடர்பு இல்லை எனக்கூறி ஆரணி தாலுகா அலுவலகம் முன் 2 குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரணி,

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானாள். அந்த சிறுமி ஆரணியில் உள்ள உறவினர் சித்ரா என்பவர் வீட்டில் தங்கினாள். அப்போது அவளை சிலர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னைக்கு திரும்பியபோது அந்த சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அது குறித்து பெற்றோர் விசாரிக்கையில் ஆரணியில் உள்ள உறவினர் சித்ரா, அவரது உறவினர் சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர், உதவியாளருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சித்ரா, சுரேஷ் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர், உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் சித்ராவும், சுரேஷும் தலைமறைவாயினர். டாக்டரிடமும் உதவியாளரிடமும் சென்னையில் நடந்த விசாரணையில் அந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பது தெரியவரவே இருவரையும் போலீசார் விடுவித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட சித்ரா (வயது 30), தனது மகன்கள் பிரசன்னா (8), சந்துரு (6) ஆகியோருடன் நேற்று காலை 10.30 மணியளவில் ஆரணி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தாலுகா அலுவலகம் முன் தீக்குளிப்பதற்காக தான் கொண்டு வந்திருந்த கேனிலிருந்த மண்எண்ணெயை மகன்கள் மீது ஊற்றிவிட்டு தனது உடலிலும் ஊற்றினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் உள்ள நகர காவல் நிலைய போலீசார் இதனை பார்த்ததும் அங்கு வந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சித்ராவிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் தீக்குளிக்காமல் இருப்பதற்காக உடலில் தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரை குழந்தைகளுடன் ஆரணி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அவர் கூறுகையில், “ உறவினர் பெண் பாலியல் புகார் கூறிய சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர். இதற்கு வேறுசிலர்தான் துணையாக இருந்தனர் என கூறினார். இது குறித்து போலீசார் சென்னை திருமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் ஆரணிக்கு வந்த அவர்களிடம் சித்ராவை போலீசார் ஒப்படைத்தனர்.

தேடப்பட்டவர் சரண்

இதற்கிடையே போலீசார் தேடிய சித்ராவின் உறவினர் சுரேஷ் (36) நேற்று மாலை ஆரணி போலீசாரிடம் சரண் அடைந்தார். அவரையும் மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அவர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளார். 

Related Tags :
Next Story