மிகப்பெரிய டெலஸ்கோப்


மிகப்பெரிய டெலஸ்கோப்
x
தினத்தந்தி 13 Sep 2017 5:48 AM GMT (Updated: 13 Sep 2017 5:48 AM GMT)

உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. சீனா முதன் முறையாக விமானம், கப்பல் ஆகியவற்றின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் மிகச் சிறிய மூன்று செயற்கைக்கோள்களை சில வருடங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தியது.

லக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. சீனா முதன் முறையாக விமானம், கப்பல் ஆகியவற்றின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் மிகச் சிறிய மூன்று செயற்கைக்கோள்களை சில வருடங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தியது. இது விண்வெளி ஆராய்ச்சியில் அழுத்தமாக கால்பதிக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் தொடக்கம் எனலாம். காரணம் பல்வேறு சிறப்புகளையும் பெற்று ஜாம்பவானாக திகழும் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனிமுத்திரையை இதுவரை பதிக்கவில்லை. இதற்காக ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு அதிக நிதியை சீனா ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய இடத்தை பிடிக்க சீனா களம் இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. 2022-ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து அதிக தூரத்துக்கு சமிக்ஞைகளை அனுப்பவும், பெறவும் உலகின் மிகப்பெரிய ஆன்டனாவை சீனா கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த ஆன்டனாவின் விட்டம் சுமார் 30 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக இருக்கும். இதன் எடை 10 ஆயிரம் டன்கள் ஆகும். இதன் மூலம் பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் உள்ள கிரகங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பவும், பெறவும் முடியும். இதில் சுமார் 4 லட்சத்து 60ஆயிரம் எதிரொலிக்கும் கண்ணாடிகள் உள்ளன. இதன் மொத்த பரப்பு சுமார் 1.6 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

இந்த டெலஸ்கோப் சீனாவில் குய்ஷூ மாகாணத்தில் நிறுவப்படுகிறது. இந்த ராட்சத டெலஸ்கோப்பின் பிரதிபலிப்பான் (ரெப்ளக்டர்) மட்டும் 500 மீட்டர் அகலமானதாக வடிவமைக்கப்படுகிறது. அந்த டெலஸ்கோப்பில் 4,450 தகடுகள் பதிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 11 மீட்டர் நீளம் இருக்கும். இது தயாரித்து முடிக்கப்பட்டால் உலகத்திலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் என்ற பெருமையை சீனா பெற்று விடும். தற்போது பெர்டோரிகோவில் ஆர்சிபோ வானிலை மையத்தில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இது 300 மீட்டர் அகல ரெப்ளக்டருடன் உள்ளது. இதன் மூலம் இடியின் போது அண்டவெளியில் ஏற்படும் சத்தத்தின் அளவை கணக்கிட முடியும். மேலும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் நடமாட்டம் பூமியில் அவ்வப்போது தென்படுவதாகவும் கூறப்படுவது பற்றி ஆராய்ச்சி நடத்த முடியும். இந்த ரேடியோ டெலஸ்கோப் மூலமாக வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறியலாம் என சீனா திட்டமிட்டுள்ளது.

Next Story