தர்மபுரி மாவட்டத்தில் நீதித்துறை அமைச்சு பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


தர்மபுரி மாவட்டத்தில் நீதித்துறை அமைச்சு பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 13 Sep 2017 10:45 PM GMT (Updated: 13 Sep 2017 9:19 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நீதித்துறை அமைச்சு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணிபுரியும் நீதித்துறை அமைச்சு பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தர்மபுரி மாவட்ட கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கீதா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயகாந்தன், விஜயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாது, அரங்கண்ணல், மாவட்ட இணை செயலாளர் சுமதி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஊதிய மாற்றத்தை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே ஏற்பட்டுள்ள 19 மாத காலதாமதத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 1.4.2003 முதல் பணியில் சேர்ந்த பணியாளர்களிடம் இருந்து புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் இதுவரை செலுத்தாததால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நீதித்துறை அமைச்சு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக நடந்த வேலைநிறுத்த போராட்டத்தால் கோர்ட்டுகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story