பண்ருட்டி அருகே அணைக்கட்டில் மூழ்கி 3 மாணவர்கள் பலி


பண்ருட்டி அருகே அணைக்கட்டில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 4 Oct 2017 4:45 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே அணைக் கட்டில் மூழ்கி 3 மாணவர்கள் பலியானார்கள்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 5-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற முருகன். இவர் 18-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் ஆவார். இவருடைய மகன் திவாகர் (வயது 15). இவர் பண்ருட்டி லட்சுமி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஹரிகேஷ்(15). இவர் லிங்க் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

இதேபோன்று திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த ரவி மகன் மோகேஷ்(14), அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வெங்கடேசனின் அக்கா மகனான மோகேஷ் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், பண்ருட்டியில் உள்ள வெங்கடேசனின் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் திவாகர், ஹரிகேஷ், மோகேஷ் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அன்றைய தினம் மாலை வரைக்கும் வீடு திரும்பவில்லை. இவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் திவாகரின் தந்தை தனது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் தனது மகன் உள்பட 3 பேர் மாயமானது பற்றியும், அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எண் ஆகியவற்றை புகைப்படத்துடன் பதிவு செய்து, யாரேனும் தகவல் கிடைத்தால் தொடர்பு கொள்ளுமாறு தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், அவர் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் திருவதிகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு பகுதியில் நின்றதை பார்த்த ஒரு வாலிபர், இதுபற்றி பிரகாசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது கரையோர பகுதியில் மோட்டார் சைக்கிளும், மோகேஷ் அணிந்திருந்த ஆடையும் கிடந்தது. இதன் மூலம் அவர்கள் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அவர்கள், இதுபற்றி பண்ருட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஹரிகேஷ், மோகேஷ் ஆகியோரது உடல்கள் மட்டும் சிக்கியது. நேற்று காலை 5 மணிக்கு கிராம மக்கள் சேற்றில் சிக்கிய நிலையில் இருந்த திவாகரனின் உடலை மீட்டனர்.

மோகேஷ் முதலில் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, அவர் சேற்றில் சிக்கி இருக்கலாம் என்றும், அவரை காப்பாற்ற முயன்ற போது, ஹரிகேஷ், திவாகர் ஆகியோர் சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story