ஈரோட்டில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை, 4 வாலிபர்கள் கைது


ஈரோட்டில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை, 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Oct 2017 11:00 PM GMT (Updated: 9 Oct 2017 7:00 PM GMT)

ஈரோட்டில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு வளையக்கார வீதி வி.வி.சி.ஆர். நகர் 1-வது வீதியை சேர்ந்தவர் முகமது அன்சர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மும்தாஜ் (30).

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது அன்சர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்தையன் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் குப்பிபாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த மொபட் மீது இவர்களது மோட்டார்சைக்கிள் மோதியதாக தெரிகிறது. அந்த மொபட்டில் ஈரோடு காமாட்சி காட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) மற்றும் வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (29) ஆகியோர் இருந்தனர்.

மோட்டார்சைக்கிள் -மொபட் மோதியதால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன், லோகு என்கிற லோகநாதன் மற்றும் அவர்களது நண்பர்களான ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற அருண் (25), வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த தியாகராஜன் (25) ஆகிய 4 பேரும் மது அருந்தியதாக தெரிகிறது.

பின்னர் இவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து மதுபோதையில் வி.வி.சி.ஆர். நகருக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த முகமது அன்சரை அடித்து, உதைத்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் முகமது அன்சர் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முகமது அன்சர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த முகமது அன்சரின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முகமது அன்சரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், லோகு என்கிற லோகநாதன், தினேஷ் என்கிற அருண், தியாகராஜன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story