சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி பலி திருச்செங்கோடு அருகே பெண் சாவு


சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி பலி திருச்செங்கோடு அருகே பெண் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2017 11:00 PM GMT (Updated: 9 Oct 2017 9:08 PM GMT)

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி பலியானார்கள். திருச்செங்கோடு அருகே பெண் உயிரிழந்தார்.

சேலம்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கவும், புழுக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், மாறிவரும் பருவநிலை மற்றும் தொடர் மழை காரணமாக கொசுக்களை ஒழிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரும் அதிக அளவில் உள்ளனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள். மேலும் மர்ம காய்ச்சல் கண்டு 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று சிறுவனும், சிறுமியும் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

சிறுவன் பலி

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். கூலித் தொழிலாளி. இவருடைய 12 வயது மகன் சக்திவேல். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சக்திவேல் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அவனை, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சக்திவேலுக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதியானது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சக்திவேல் நேற்று உயிரிழந்தான்.

11 வயது சிறுமி

சேலன் ஜான்சன்பேட்டை கோர்ட்டு ரோடு காலனி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார்- சத்யவாணி தம்பதியின் 11 வயது மகள் ரக்‌ஷிதா. இவள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ரக்‌ஷிதாவை, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது அவளுக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரக்‌ஷிதா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். கோர்ட்டு ரோடு காலனி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். ஏற்கனவே, இந்த பகுதியில் ஸ்ரீதரன், தானேஸ்வரன் ஆகிய 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 3-வதாக ரக்‌ஷிதா உயிரிழந்துள்ளாள். இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

பெண் சாவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கருமகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தனசேகர். குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர். இவரது தாயார் சரஸ்வதி கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தனசேகருக்கு தீபிகா (14), மதனிகா (13) என 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் மதனிகாவும் சரஸ்வதியை போல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாள்.

இந்த நிலையில் தனசேகரின் மனைவி ரமாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகாததால், நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ரமா இறந்து போனார். கருமகவுண்டம்பாளையத்தில் மேலும் பலர் இதுபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, அதிகாரிகள் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story