நல்லம்பள்ளி அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு: மாணவ, மாணவிகள் போராட்டம்


நல்லம்பள்ளி அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு: மாணவ, மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2017 6:30 AM GMT (Updated: 10 Oct 2017 5:33 AM GMT)

நல்லம்பள்ளி அருகே பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது உழவன் கொட்டாய் கிராமம். இங்கு முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையையொட்டி சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதையொட்டி விவசாய நிலமும் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முருகன் கோவில் சாலைக்கு வர வேண்டும் என்றால் அந்த விவசாய நிலம் அருகே உள்ள பொதுவான வழிப்பாதை வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

தற்போது இந்த வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் செல்ல வழியின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், ஊராட்சி செயலர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மேகலா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் முள்வேலி அகற்றப்பட்டு பொது வழிப்பாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story