நீலகிரியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


நீலகிரியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 5:28 AM GMT (Updated: 11 Oct 2017 5:28 AM GMT)

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கண்டித்து, நீலகிரியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடியது.

ஊட்டி,

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. இந்த மசோதா சட்ட மயமாக்கப்பட்டால் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்கள், ஒர்க்‌ஷாப் உரிமையாளர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதற்கு காரணம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் மலைப்பகுதியில் 5 ஏக்கர் நிலமும், சமவெளி பகுதியில் 10 ஏக்கர் நிலமும் இருந்தால் மட்டுமே ஓட்டுனர் பயிற்சி அளிக்க முடியும்.

மேலும் வாகனம் பழுது பார்க்கப்பட்டு தகுதி சான்றிதழ் பெற, அந்த வாகனம் எந்த நிறுவனத்தை சேர்ந்ததோ, அதே நிறுவனம் மூலம் நடத்தப்படும் பணிமனையில் தான் பணி செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் தகுதி சான்றிதழ் பெற முடியும். வாகனங்கள் பழுது பார்க்க தேவைப்படும் உதிரி பாகங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நேரடியாக வாங்க வேண்டும். இதன் மூலம் நாடு முழுவதும் பல கோடி பேர் வேலையிழப்பு, தொழில் இழப்பு, இளைஞர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற அதிக செலவு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

நீலகிரி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம், வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், ஒர்க்‌ஷாப் உரிமையாளர்கள் ஆகியோர் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கண்டித்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சக்ரியா தலைமை தாங்கினார். தலைவர் சக்திவேல், துணை தலைவர் பிரின்ஸ், இணை செயலாளர் பெல்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடியது
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு பெற என இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு செய்ய யாரும் வரவில்லை. இதனால் அலுவலகத்தில் உள்ள வாகன பதிவு கட்டணம் செலுத்தும் இடம், ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் இடம் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரே ஒரு வாகன பதிவு மட்டும் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வேறு யாரும் அலுவலகத்துக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story