கால்வாய் ஷட்டர்களின் அளவு குறைப்பு: மானாமதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்


கால்வாய் ஷட்டர்களின் அளவு குறைப்பு: மானாமதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 7:30 AM GMT (Updated: 11 Oct 2017 5:42 AM GMT)

மானாமதுரையில் கால்வாய் ஷட்டர்கள் அளவு மற்ற கால்வாய்களின் அளவை விட குறைத்து கட்டுவதாக கூறி விவசாயிகள் கட்டுமான பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை,

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிக்காக கால்வாய்கள் பலவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வைகை ஆற்றில் இருந்து கிராமப்புற கண்மாய்களுக்கு செல்லும் பாசன கால்வாய்கள் பலவும் நான்கு வழிச்சாலை பணிக்காக மாற்றப்பட்டுள்ளன. இதில் மாவட்டத்தின் கடைசி கால்வாயான கீழப்பசலை கால்வாயும் ஒன்று. மானாமதுரை கால்பிரவு என்ற இடத்தில் வைகை ஆற்றில் இருந்து வலது பிரதான கால்வாயாக பிரியும் கீழப்பசலை கால்வாய் 7 கி.மீ. தூரம் கொண்டது. இதில் மானாமதுரை பைபாஸ் ரோடு அருகே ஷட்டர்கள் அமைக்கப்பட்டு கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர் ஆகிய மூன்று கிராம கண்மாய்களுக்கும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது நான்கு வழிச்சாலை பணி காரணமாக இந்த ஷட்டர்கள் புதிதாக கட்டப்படுகின்றன. நான்கு வழிச்சாலை திட்ட நிதியில் இருந்து கட்டப்படும் இந்த ஷட்டர்களின் அளவில் வித்தியாசம் இருப்பதாக ஆதனூர் கிராம விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று கால்வாய் ஷட்டர் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டத்தை அடுத்து நேற்று கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, பழைய ஷட்டர் 1.17 மீட்டர் அகலம் இருந்தது. தற்போது 1.10 மீட்டர்தான் உள்ளது. இதில் குறைந்த அளவு தண்ணீர் தான் செல்ல முடியும். இதனால் கண்மாய் நிரம்ப வாய்ப்பு இல்லை. இந்த முறையில் ஷட்டர் கட்டினால் வாய்க்காலில் தண்ணீர் செல்வது போல சிறிதளவே செல்ல வாய்ப்புள்ளது. மற்ற கண்மாய்களுக்கு பழைய முறைப்படி ஷட்டர் கட்டிய அதிகாரிகள் ஆதனூர் கால்வாய் ஷட்டர் அளவை மட்டும் குறைத்து கட்டுகின்றனர் என்றனர்.

Next Story