‘டெங்கு’ காய்ச்சலுக்கு, துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மனைவி பலி


‘டெங்கு’ காய்ச்சலுக்கு, துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மனைவி பலி
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:02 PM GMT)

திருச்சி விமான நிலையம் அருகே ‘டெங்கு’ காய்ச்சலுக்கு துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மனைவி பலியானார்.

செம்பட்டு,

தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தினமும் உயிர்ப்பலி நடந்து வருகிறது. தமிழக அரசு டெங்கு தடுப்பு பணிகளை முடுக்கி விட்டாலும் டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்க முடியவில்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பல இடங்களில் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.

திருச்சியில் தொடரும் உயிர்ப்பலி

திருச்சி மாவட்டத்திலும் ‘டெங்கு’ பாதிப்பு இருந்து வருகிறது. டெங்கு அறிகுறி உள்ள 34 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் ஆங்காங்கே ‘டெங்கு’ காய்ச்சலுக்கு தினமும் உயிர்ப்பலி நடந்து வருகிறது. உப்பிலியபுரம் அருகே உள்ள மாராடியை சேர்ந்த பால் வியாபாரி கனகராஜ் மனைவி புவனேஸ்வரி(வயது47) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலைய பகுதி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி (24). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்பு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார். ‘டெங்கு’ காய்ச்சலுக்கு கனிமொழி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story