இந்திய பயணத்தால் கிடைத்த காசும்.. காதலும்..


இந்திய  பயணத்தால்  கிடைத்த  காசும்..  காதலும்..
x
தினத்தந்தி 13 Oct 2017 2:30 AM GMT (Updated: 12 Oct 2017 12:48 PM GMT)

சாதாரண குடும்பத்தில் பிறந்து, அதிகார கோட்டையில் அமரும், நமது தமிழ் சினிமாவின் கதாநாயகன்களின் கதையைப் போன்று விறுவிறுப்பு நிறைந்தது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, அதிகார கோட்டையில் அமரும், நமது தமிழ் சினிமாவின் கதாநாயகன்களின் கதையைப் போன்று விறுவிறுப்பு நிறைந்தது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்சின் வாழ்க்கை. சுமார் 300 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்பட்டவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர் போட்ட பலமான அஸ்திவாரமே இதற்குக் காரணம்.

நடுத்தர குடும்பம் என்றாலும், 1732–ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிறந்தபோது, அவரது குடும்பம் எல்லாவற்றையும் இழந்து ஏழ்மை நிலையில் இருந்தது. இந்தியாவிற்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என கப்பல் ஏறிய அந்த கால இங்கிலாந்து இளைஞர்களைப் போல, 18–வது வயதில் தனது பயணத்தைத் தொடங்கினார் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண எழுத்தராக அவர் வந்திறங்கியது கொல்கத்தாவில் என்றாலும், வாழ்வில் அனைத்து விதமான ஆட்டங்களையும் ஆடிப் பார்த்தது அன்றைய மெட்ராசில் தான்.

1750–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொல்கத்தா வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், தனது கடின உழைப்பால் விரைவில் நல்ல பெயர் எடுத்தார். இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும், உருது, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்பதிலும் ஓய்வு நேரத்தை செலவிட்டார். அவரது கடின உழைப்பு வெகுவிரைவில் முக்கிய பொறுப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு கொல்கத்தாவின் முக்கிய பதவிகளை அலங் கரித்தார். அந்தச் சூழலில் கொல்கத்தாவின் ஆட்சி நிலை தடுமாறியதால், பதவிகளை உதறித் தள்ளிவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிவிட்டார்.

தனது மற்ற சகாக்களைப் போல தாயகம் திரும்பும்போது, பெரும் செல்வத்தை அவர் சேர்த்துக்கொண்டு செல்லவில்லை. அவர் சேர்த்த சிறிதளவு பணமும் விரைவிலேயே கரைந்துவிட, கடனாளியாகச் சுற்றினார். அப்போதுதான் மீண்டும் இந்தியா செல்வது என முடிவெடுத்தார். அந்த முடிவு அவரது வாழ்வை மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது.

இந்த முறை அவருக்கு மெட்ராசில் வேலை கிடைத்தது. இதற்காக 1769–ல் ‘ட்யூக் ஆப் கிராப்டன்’ என்ற கப்பலில் ஏறிய போதுதான், அவரது வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதே கப்பலில் இம்ஹோப் என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வசதியில் குறைந்த இம்ஹோப், நன்றாக ஓவியம் வரைவார். எனவே ஓய்வு நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகளை படம் வரைந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்போடு, மெட்ராஸ் நோக்கி பயணமானார்.

அது நீண்ட கப்பல் பயணம். அதற்குள் வாரன் ஹேஸ்டிங்ஸும், இம்ஹோபின் மனைவி மரியாவும் நெருங்கிய நண்பர்களானார்கள். கடல் பயணம் ஒத்துக்கொள்ளாமல் ஹேஸ்டிங்ஸ் நோய்வாய்ப்பட்டபோது, மரியா மருந்துகளோடு சேர்த்து அன்பையும் கொடுத்து அரவணைத்தார். ஏற்கனவே மனைவியை இழந்திருந்த ஹேஸ்டிங்ஸுக்கு மரியாவின் துணை பெரும் ஆறுதலாக இருந்தது. சென்னையில் வந்து இறங்குவதற்கு முன்பே இவர்களின் நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.

சென்னைக்கு வந்ததும் வாரன் ஹேஸ்டிங்ஸ் அடிக்கடி மரியாவின் வீட்டிற்கு சென்று வந்தார். 1771–ல் மரியா தனது கணவருடன் கொல்கத்தா செல்ல நேரிட்டது. காதலியை பிரிந்தாலும் பரவாயில்லை என சென்னையிலேயே தங்கியிருந்தார். ஏனெனில் சென்னையின் ஆளுநர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் விதி, மரியா வசிக்கும் நகரான கொல்கத்தாவிலேயே அவருக்கு ஆளுநர் பதவியை பெற்றுத் தந்தது.

ஹேஸ்டிங்ஸ் கொல்கத்தா சென்றதும் அவர் களது உறவு மீண்டும் தொடர்ந்தது. அந்நாட்களில் கொல்கத்தா முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. இதனிடையே ஹேஸ்டிங்ஸ் தனது நிர்வாகப் பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார். அந்த காலத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சிக்கல்களையும் திறம்பட சமாளித்தார். எனவே 1773–ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதுநாள் வரை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் இருந்து வந்தனர். ஹேஸ்டிங்ஸின் முயற்சியால்தான் இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

இதனிடையே மரியா–ஹேஸ்டிங்ஸ் காதல் வலுப்பெற்றது. 1777–ம் ஆண்டு மரியா தனது கணவரை விவாகரத்து செய்துகொண்டு ஹேஸ்டிங்ஸை கரம் பிடித்தார். இவர்களின் இல்வாழ்க்கை கடைசி வரை இனிமையாகத் தொடர்ந்தது. இந்தச் சூழலில்தான் ‘பெங்கால் கெஜட்’ என்ற இந்தியாவின் முதல் செய்தித் தாளைத் தொடங்கினார், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி. அந்த  பத்திரிகை ஹேஸ்டிங்ஸையும், மரியாவையும் பற்றி  சரமாரியாக எழுதியது. இப்படித்தான் இந்தியாவின் முதல் பத்திரிகை, கிசுகிசு செய்திகளால் சூடு பிடித்தது. கவர்னர் ஜெனரல் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி, ஹிக்கியை சிறையில் அடைத்தார். அப்போதும் அடங்காத ஹிக்கி, ஹேஸ்டிங்ஸை தாக்கி எழுதிய வண்ணம் இருந்தார். இதனால் அவரது அச்சகத்தையும் அரசு அபகரித்துக் கொண்டது. இறுதியில் தனது போரில் ஹிக்கி தோற்றார்.

ஹிக்கியின் பத்திரிகைக்கு தீனி போடுவதைப் போல ஹேஸ்டிங்சும் நிறைய அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஊழல்களிலும் ஈடுபட்டார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்   கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி இங்கிலாந்தின் காமன் சபையில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில், வாரன் ஹேஸ்டிங்ஸ் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை விலைக்கு வாங்கினார், வாரன் என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ஓட்டாண்டியாய் இந்தியா வந்து ஓஹோவென வாழ்ந்து, பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்த ஆங்கிலேயர்கள் வரிசையில் வாரன் ஹேஸ்டிங்ஸும் இடம்பிடித்துவிட்டார்.

Next Story