டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை கலெக்டர் வீடு வீடாக சென்று ஆய்வு


டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை கலெக்டர் வீடு வீடாக சென்று ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 21 Oct 2017 9:50 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையையொட்டி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள உபயோகமற்ற டயர்கள், பெயிண்ட் டப்பாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணி, கொசுமருந்து அடிப்பது, பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி கம்பளிமேடு, புலியூர் ஊராட்சி வசனாங்குப்பம், விருப்பாச்சி பொட்டவெளி மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 5-வது வார்டு ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

குப்பை தொட்டிகளில்

அப்போது பொதுமக்களிடம் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் உபயோகமற்ற பொருட்களில் மழைநீர் தேங்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீரில்தான் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் அவற்றை நன்றாக மூடி வைக்க வேண்டும். அன்றாடம் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை பொது இடங்களில் வீசாமல் குப்பை தொட்டிகளில் போட வேண்டும். வீடு மற்றும் சுற்றுப் புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இதைத் தொடர்ந்து பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணிகளான உபயோகமற்ற டயர்கள், பெயிண்ட் டப்பாக்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நீர்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் இணைப்பு குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக சீர் செய்து குடிநீர் வீணாவதை தடுக்கவும், நீர் தேங்காதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது குறிஞ்சிப்பாடி தாசில்தார் ஜான்சிராணி, வட்டார வளர்ச்சி அதிகாரி அசோக்பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story