வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ம.தி.மு.க. பிரமுகர் பலி


வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ம.தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 13 Nov 2017 11:00 PM GMT (Updated: 13 Nov 2017 9:09 PM GMT)

வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு, ம.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

வாசுதேவநல்லூர்,

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் என்ற அருளாச்சி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). ம.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காய்ச்சல் குறையாததால், அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

டெங்கு காய்ச்சலுக்கு பலி

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் காய்ச்சல் குறைந்தபாடில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜன் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். நாகராஜனுக்கு அழகுத்தாய் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. டெங்கு காய்ச்சலுக்கு நாகராஜன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story