வீட்டு பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியதால் பால் வியாபாரி தற்கொலை


வீட்டு பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியதால் பால் வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 11 Dec 2017 9:47 PM GMT)

வீட்டு பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியதால் தூக்குப்போட்டு பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நர்சு உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவண்டிக்காரத் தெருவில் வசித்து வந்தவர் முருகேசன்(வயது40). பால் வியாபாரி. இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 14 வயதுடைய சந்தோஷ் என்ற மகனும், பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக முருகேசன் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுகாலை தூங்கி எழுந்தவுடன் தனது மாமியார் யசோதாவிடம் டீ போட சொன்னார். அவர் டீ போட்டுக் கொண்டு வருவதற்குள் குடிசை வீட்டின் கம்பில் சேலையால் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த யசோதா சத்தம்போட்டார்.

இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கி கொண்டிருந்த முருகேசனை கீழே இறக்கி, உயிர் இருக்கிறதா? என பார்த்தனர். ஆனால் அவர் இறந்து போனது தெரியவந்தது. பின்னர் இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் முருகேசன் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தொல்காப்பியர் நகர் 2-ம் தெருவில் வசித்து வரும் முருகேசனின் மைத்துனர் சதீஷ்குமார்(34) தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், இறந்த முருகேசனின் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருடைய சகோதரிகள் புஷ்கரனி, சுந்தரி, சுந்தரியின் கணவர் சசிகுமார் ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களில் புஷ்கரனி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த 4 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசனிடம் சென்று அடகு வைத்து பணம் பெறுவதற்காக வீட்டு பத்திரத்தை கேட்டனர். தான் விருப்ப ஓய்வு பெற இருப்பதாகவும், அப்போது வரும் பணத்தை வைத்து பத்திரத்தை மீட்டு கொடுத்துவிடுவதாகவும் புஷ்கரனி கூறினார்.

இதை நம்பி முருகேசன் தனது வீட்டு பத்திரத்தை கொடுத்தார். அந்த பத்திரத்தை வைத்து மன்னார்குடியை சேர்ந்த 2 பேரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றனர். இந்த கடனுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி செலுத்த வேண்டும். 3 மாதங்கள் வட்டி கட்டிய அவர்கள் கடந்த 10 மாதங்களாக வட்டி செலுத்தவில்லை. இந்தநிலையில் திடீரென கீழவண்டிக்காரத்தெருவில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு இவர்கள் 4 பேரும் ஆர்.எம்.எஸ்.காலனிக்கு சென்றுவிட்டனர். வீட்டு பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ரூ.3 லட்சம் ஏமாற்றியதால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் தஞ்சை கிழக்கு போலீசார், இந்திய தண்டனை சட்டம் 174(தற்கொலை) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story