கடும் பனிமூட்டம் காரணமாக லாரியின் பின் பகுதியில் கார் மோதி விபத்து; வங்கி மேலாளர் பலி


கடும் பனிமூட்டம் காரணமாக லாரியின் பின் பகுதியில் கார் மோதி விபத்து; வங்கி மேலாளர் பலி
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 11 Dec 2017 9:48 PM GMT)

வெள்ளகோவில் அருகே கடும் பனிமூட்டம் காரணமாக லாரியின் பின்பகுதியில் கார் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் காரைஓட்டிச்சென்ற வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

வெள்ளகோவில்,

சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிபட்டியை சேர்ந்தவர் ஓம்குமார் (வயது 38). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாரதி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அங்கிருந்து குன்னூருக்கு வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி பிரவீனா. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி தாழக்குடி டோல்கேட் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அங்கிருந்து கல்லூரிக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

திருச்சியில் வேலை செய்யும் இவருடைய மனைவி பிரவீனா வாரம் ஒருமுறை மேட்டுப்பாளையம் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி கடந்த 9-ந்தேதி மாலையில் கல்லூரி முடிந்ததும் திருச்சியில் இருந்து பிரவீனா மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் நேற்று திங்கட்கிழமை கல்லூரிக்கு பிரவீனா செல்ல வசதியாக, ஓம்குமார் நேற்று முன்தினம் இரவு காரில் மனைவியை திருச்சியில் கொண்டு விட சென்றார். பின்னர் வேலைக்கு செல்வதற்காக நேற்று அதிகாலையில் திருச்சியில் இருந்து ஓம்குமார் குன்னூருக்கு காரில் வந்தார்.

கார் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை கடந்து பச்சாபாளையம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஓம்குமார் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது டமார் என்று சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர், லாரியின் டயர் வெடித்து விட்டதோ? என்ற அச்சத்தில் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வந்து பார்த்தபோது, லாரியின் பின் பகுதியில் கார் மோதி நொறுங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வெள்ளகோவில் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய காரை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு, லாரிக்குள் புகுந்த கார் மீட்கப்பட்டது. இதில் கார் உருக்குலைந்து அப்பளம் போல் நொறுங்கி இருந்தது. காருக்குள் டிரைவரின் இருக்கையில் ஓம்குமார் உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

உடனே அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற காட்டுமன்னார்குடியை சேர்ந்த சிங்காரம் (32) என்பவர் வெள்ளகோவில் போலீசில் சரண் அடைந்தார். மேலும் இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடும் பனி மூட்டம் காரணமாக லாரியின் பின்னால் கார் புகுந்த விபத்தில் வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story